
ஜோர்ஜ் டவுன், மே-4-போலீஸ் ரோந்து வாகனம் துரத்தியபோது, இதர 12 வாகனங்கள் மீது கார் ஓட்டுநர் ஒருவர் மோதியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக, 29 வயதான நபரை நான்கு நாட்களுக்கு தடுத்து வைக்கும் உத்தரவை பினாங்கு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் பிறப்பித்தது.
1987 ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 42(1)-இன் கீழ் விசாரணைகளை மேற்கொள்ளும் பொருட்டு , மாஜிஸ்திரேட் ஷாஹிரா அப்துல் சலீம் (Shyahirah Abdul Salim) பிறப்பித்த இந்த தடுப்புக் காவல் உத்தரவு, இன்று முதல் மே 7ஆம்தேதி வரை அமலில் இருக்கும்.
வேலையில்லாத அந்த நபர், நேற்றிரவு 8.30 மணிக்கு, Gelugor, அருகே ஒரு வீட்டில் கைது செய்யப்பட்டார்.
கடந்த வியாழக்கிழமை இரவு 9 மணிக்கு ஜாலான் Tanjong Bungah சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் ரோந்து வாகனத்தை சேர்ந்த அதிகாரிகள் , சந்தேகத்திற்கிடமான முறையில் அந்த ஆடவர் ஓட்டிய காரை சுமார் 20 கிலோமீட்டர் தூரம் துரத்திச் சென்றபோது அக்கார் இதர வாகனங்களில் மோதியது.
இதனைத் தொடர்ந்து தங்களது வாகனங்கள் பல்வேறு சேதங்களுக்கு உள்ளானதாகக் கூறி, 12 பேர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்திருந்ததாக பினாங்கு போலீஸ் தலைவர் டத்தோ அஸிஸி இஸ்மாயில் (Azizee Ismail) இதற்கு முன் கூறியிருந்தார்.
மேலும், இந்தச் சம்பவம் தொடர்பான 43 வினாடிகள் கொண்ட காணொளி சமூக ஊடகங்களில் வைரலானது.



