கோத்தா பாரு, ஏப்ரல் 16 – KLIA – கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின், பயணிகள் வந்திறங்கும் பகுதியில், கடந்த வார இறுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் ஆடவனை, விசாரணைக்கு உதவும் பொருட்டு ஏழு நாட்கள் தடுத்து வைக்க, கோத்தா பாரு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.
இன்று தொடங்கி இம்மாதம் 22-ஆம் தேதி வரை அவன் தடுத்து வைக்கப்படுவான் என மாஜிஸ்திரேட் அறிவித்தார்.
முன்னதாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை, பின்னிரவு மணி 1.30 வாக்கில், நிகழ்ந்த அச்சம்பவத்தில், அவ்வாடவனின் மனைவியின் மெய்காவலர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்தார்.
உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அந்த மெய்காவலரின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அந்த துப்பாக்கி சூட்டு தாக்குதலை மேற்கொண்ட பின்னர் தப்பிச் சென்று தலைமறைவாகிவிட்ட, 38 வயது ஹபிசுல் ஹராவி எனும் அவ்வாடவன், நேற்று மாலை மணி மூன்று வாக்கில், கோத்தா பாருவில் கைதுச் செய்யப்பட்டான் என்பது குறிப்பிடத்தக்கது.