
அலோர் ஸ்டார், ஜூன்-24-4 ஆண்டுகளுக்கு முன்பு, பல்கலைக்கழக தங்கும் விடுதி அறையில் மின்சாரம் தாக்கி மாணவி மரணமடைந்ததாக கூறி, வட மலேசியப் பல்கலைக்கழகத்திற்கு (UUM) எதிராகத் தொடரப்பட்ட 3 மில்லியன் ரிங்கிட் நஷ்டஈடு வழக்கை, அலோர் ஸ்டார் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
21 வயது மாணவி எஸ். வினோசினியின் மரணம் மின்சாரம் தாக்கியதால் தான் ஏற்பட்டது என்பதை வாதி தரப்பு நிரூபிக்கத் தவறிவிட்டதாக நீதிபதி Dr Mohammad Johan Lee தீர்ப்பளித்தார்.
சவப் பரிசோதனை அறிக்கையில் உள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்டிய அவர், சம்பவ இடத்தை ஆய்வு செய்யாமலும், முக்கிய தடயவியல் சோதனைகளை மேற்கொள்ளாமலும் மருத்துவ அதிகாரி முன்கூட்டியே ஒரு முடிவுக்கு வந்துள்ளார் எனக் குறிப்பிட்டார்.
அதேவேளை, அந்த விடுதியில் உள்ள அனைத்து மின்சாரக் கட்டமைப்புகளும் பாதுகாப்புச் சாதனங்களும் எந்தவொரு மின் கசிவும் இன்றிச் சரியாகச் செயல்பட்டதாக எரிசக்தி ஆணையம் வழங்கிய ஆதாரத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.
மேலும், அந்த மாணவிக்கு மாரடைப்பை ஏற்படுத்தக்கூடிய _‘myocardial fibrosis’_ என்ற இதய நோய் இருந்ததும் மருத்துவ ஆதாரங்கள் மூலம் தெரியவந்துள்ளதாக நீதிபதி தெரிவித்தார்.
இத்தீர்ப்பை எதிர்த்து உடனடியாக மேல்முறையீடு செய்யவுள்ளதாக வாதி தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
2022-ஆம் ஆண்டு மே 21-ஆம் தேதி, கணக்கியல் துறை இரண்டாம் ஆண்டு மாணவியான வினோசினி தனது விடுதி அறையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.



