
குவாந்தான், ஜூன் 17 – பெந்தோங் அருகிலுள்ள ஜண்டா பாயிக் (Janda Baik) ஆற்றில் குளித்த பிறகு சிலர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டதாக வெளியான தகவல் தொடர்பாக, பகாங் மாநில சுகாதாரத் துறை விசாரணை நடத்தி வருகிறது.
இதுவரை, இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய உணவு நச்சுத்தன்மை அல்லது கடுமையான வயிற்றுப்போக்கு நோய் பாதிப்பு எதுவும் உறுதி செய்யப்படவில்லை என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
கடந்த ஜூன் 14ஆம் தேதி, ஜண்டா பாயிக்கில் உள்ள பெனுஸ் (Benus) ஆற்றின் பல பகுதிகளிலிருந்து நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளன. அதன் முடிவுகள் இன்னும் கிடைக்கவில்லை.
இதனுடன், நோய்க்கான காரணத்தைக் கண்டறிய அதிகாரிகள் சம்பவம் தொடர்பான விசாரணை, சுற்றுச்சூழல் ஆய்வு மற்றும் நோய்த் தொற்று கண்காணிப்பு நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தியுள்ளனர்.
ஆற்றுக்குச் சென்ற பின்னர் வயிற்றுப்போக்கு, வாந்தி, வயிற்றுவலி அல்லது காய்ச்சல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால், உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெறுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.



