
ஜோர்ஜ்டவுன், ஜூன்-16-பினாங்கில் 76 ஆண்டுகள் பழமையான ராஜாஜி தமிழ்ப்பள்ளிக்கு Farlim பகுதியில் புதிய மாற்று வளாகம் அமைப்பதற்கான அதிகாரப்பூர்வ அனுமதி கடிதத்தை கல்வித் துணையமைச்சர் வோங் கா வோ நேற்று முறைப்படி வழங்கினார்.
தற்போது 100 மாணவர்கள் மற்றும் 20 பாலர் பள்ளி குழந்தைகளைக் கொண்டுள்ள இப்பள்ளி, மாநில அரசு வழங்கிய 2.3 ஏக்கர் பரப்பளவிலான புதிய நிலத்திற்கு இடமாற்றம் செய்யப்படவுள்ளது.
ஒரு தனியார் வீடமைப்பு மேம்பாட்டாளரால் முழுமையாக நிதியளிக்கப்படும் இப்புதிய பள்ளி வளாகக் கட்டுமானப் பணிகள், சுமார் 8 மில்லியன் ரிங்கிட் செலவில் 18 மாதங்களுக்குள் நிறைவடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இப்பள்ளி தனது புதிய வளாகத்தில் வரும் 2029-ஆம் ஆண்டின் கல்வித் அமர்வில் அதிகாரப்பூர்வமாகச் செயல்படத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பினாங்கு ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ ஸ்ரீ எஸ். சுந்தராஜூ மற்றும் பள்ளியின் தலைமையாசிரியை லூயிஸ் மேரி பாலவேந்திரம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தற்போதைய ஆட்சியின் கீழ் எந்தவொரு தாய்மொழிப் பள்ளிகளும் மூடப்படாது என, துணையமச்சர் வோங் கா வோ உறுதியளித்தார்.
மேலும், 2026-ஆம் ஆண்டுக்காக நாடு முழுவதும் உள்ள தமிழ்ப்பள்ளிகளின் பராமரிப்புக்காக 50 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதையும் அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.
இதனிடையே, பினாங்கில் உள்ள அனைத்து 28 தமிழ்ப் பள்ளிகளுக்கும் அடுத்த சில ஆண்டுகளில் நிலப் பட்டாக்களை வழங்குவதை மாநில அரசு இலக்காகக் கொண்டுள்ளது.
3 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்ப் பள்ளிகளுக்கான சிறப்புக் குழு மீண்டும் செயல்பாட்டுக்கு வந்ததைத் தொடர்ந்து, இதுவரை 5 பள்ளிகள் நில உரிமையைப் பெற்றுள்ளன.
மேலும் 5 பள்ளிகள் பட்டாக்களுக்காகக் காத்திருப்பதாக டத்தோ ஸ்ரீ சுந்தராஜூ தெரிவித்தார்.
நிலப்பட்டா கிடைத்தது குறித்து மகிழ்ச்சித் தெரிவித்த தலைமையாசிரியர் லூயிஸ் மேரி, அமைச்சு உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருக்கும் நன்றித் தெரிவித்துக் கொMண்டார்.
இந்நிகழ்வில் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் Mohamad Zawawi Ahmad, புக்கிட் கெளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் ராம் கர்ப்பால் சிங், பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்ணன், பத்து ஊபான் சட்டமன்ற உறுப்பினர் குமரேசன் ஆறுமுகம், ராஜாஜி பள்ளி மேலாளர் வாரியத் தலைவர் டத்தோ Dr சந்திரன் ராமன், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் சரவணன் குமரவேல், மாவட்ட கல்வி அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.



