
புத்ராஜெயா, மே-21-மேற்காசியாவில் நீடித்து வரும் பதற்றமான சூழலால் உலகளாவிய கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, மலேசியாவில் இன்று முதல் அமுலுக்கு வரும் எரிபொருட்களின் சில்லறை விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன.
அதன்படி, மே 21 முதல் 27 வரையிலான வாரத்திற்கு, RON97 பெட்ரோல் விலை 15 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு RM4.85 ஆகவும், மானியமற்ற RON95 பெட்ரோல் விலை 20 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு RM4.07 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதே வேளையில், தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை 10 காசுகள் உயர்த்தப்பட்டு லிட்டருக்கு RM4.97 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
இருப்பினும், பொது மக்களின் பொருளாதாரச் சுமையைக் குறைக்க, அரசாங்கம் அதன் இலக்கிடப்பட்ட மானியத் திட்டங்களை எவ்வித மாற்றமுமின்றி தொடர்ந்து நிலைநிறுத்தியுள்ளது.
அவ்வகையில், தகுதியுள்ள 14 மில்லியனுக்கும் அதிகமான மலேசியர்கள் பயன்பெறும் BUDI95 திட்டத்தின் கீழ் வழங்கப்படும் RON95 பெட்ரோல் விலை, தொடர்ந்து லிட்டருக்கு RM1.99 ஆகவே நீடிக்கும்.
மேலும், சபா, சரவாக் மற்றும் லாபுவானில் டீசல் விலை தொடர்ந்து RM2.15 ஆகவும், பல்வேறு மானியக் கட்டுப்பாட்டு அமைப்புகளின் கீழ் (SKDS / SKPS) சிறப்பு விலைகளும் எவ்வித மாற்றமுமின்றி தொடரும் என நிதியமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.



