
புத்ராஜெயா, ஏப்ரல்-22-சிலாங்கூரில் மேற்கொள்ளப்பட்ட “Op Serkap” சோதனை நடவடிக்கையில், குடிநுழைவுத் துறை ஒரு பெரிய ஆவண மோசடி கும்பலை முறியடித்துள்ளது.
குடிநுழைவுத் துறையின் கணினி முறையை ஊடுருவி வெளிநாட்டுத் தொழிலாளர்களின் தரவுகளையும் ஆவணங்களையும் அக்கும்பல் மோசடி செய்து வந்துள்ளது.
சுமார் இரண்டு ஆண்டுகளாக இயங்கி வரும் இக்கும்பல், e-PASS போன்ற குடிநுழைவுத் துறையின் அசல் ஆவணங்களை மாற்றி, சட்டவிரோதமாக வெளிநாட்டவர்களை நாட்டில் தங்கச் செய்து வந்துள்ளது.
இதையடுத்து, செலாயாங் மற்றும் டேசா பெட்டாலிங்கில் 2 குடியிருப்பு வளாகங்களை முற்றுகையிட்ட அமுலாக்கத் துறை, 1 பெண் உட்பட 3 இலங்கைப் பிரஜைகளைக் கைதுச் செய்தது.
அவர்களிடமிருந்து 11 கடப்பிதழ்கள், தற்காலிக வேலை பெர்மிட்டில் வந்தவர்களுக்கான 15 i-kad அட்டைகள் , 5 டிஜிட்டல் சாதனங்கள், 5 கைப்பேசிகள், மற்றும் ஒரு அச்சு இயந்திரம் பறிமுதல் செய்யப்பட்டன.
அதோடு, போலி குடிநுழைவு ஆவணங்கள், திருமணச் சான்றிதழ்கள், மருத்துவ அறிக்கைகள் ஆகியவையும் கண்டுபிடிக்கப்பட்டன.
சந்தேக நபர்கள் மேல் விசாரணைக்காக குடிநுழைவுத் துறை தடுப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர்.



