
கோலாலம்பூர், ஜூன்-18-இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் இரயில் தண்டவாளத்தை வெடிகுண்டு வைத்துத் தகர்த்த சம்பவத்துடன் தொடர்புடைய இந்திய நாட்டவர் இருவர், மலேசியப் போலீஸாரால் கைதுச் செய்யப்பட்டு நேற்று சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர்.
இந்திய அதிகாரிகளின் வேண்டுகோளுக்கிணங்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை (CID) இயக்குநர் டத்தோ எம். குமார் தெரிவித்தார்.
கடந்த ஏப்ரல் 27-ஆம் தேதி, பஞ்சாப், பட்டியாலாவில் உள்ள ஓர் இரயில் பாதையில் மேம்படுத்தப்பட்ட வெடிபொருள் சாதனம் மூலம் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்புச் சம்பவத்தில் இந்த இருவருக்கும் தொடர்பு இருப்பதாக நம்பப்படுகிறது.
அவர்கள் இருவரும் ‘காலிஸ்தான்’ பயங்கரவாதக் குழுவுடன் தொடர்புடைய தீவிரவாதக் குற்றவாளிகள் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மலேசியா, எல்லைக் கடந்த குற்றங்களை எதிர்ப்பதிலும், அனைத்துலகப் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதிலும் தனது உறுதியான அர்ப்பணிப்பைத் தொடர்கிறது என்றும், தப்பி ஓடிவரும் குற்றவாளிகளுக்கு மலேசியா ஒருபோதும் புகலிடமாக இருக்காது” என்றும் டத்தோ குமார் தமது அறிக்கையில் திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளார்.



