
கோலாலம்பூர், அக்டோபர் 13 –
மலாக்கா, அலோர் காஜா பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் பயின்ற மாணவிக்கு பாலியல் வன்கொடுமை நடந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் 18 வயதிற்கும் குறைவானவர்கள் என்றாலும், சட்டத்திலிருந்து தப்பிக்க முடியாதென்றும், தக்க தண்டனை நிச்சயமாக வழங்கப்படுமென்றும் பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ அசாலினா ஓத்மான் சாயிட் (Datuk Seri Azalina Othman Said) தெரிவித்துள்ளார்.
18 வயதுக்கு குறைவாக இருந்தால் தண்டனையிலிருந்து எளிதில் தப்பி விடலாம் என்று சிலர் தவறாக கணித்து வருகின்றனர். ஆனால் குற்றம் செய்தால் தண்டனையை ஒருபோதும் தவிர்க்க முடியாது என்று அவர் மேலும் விளக்கினார்.
பாலியல் வன்முறை என்பது கடுமையான குற்றம் என்பதால், குற்றவாளியின் வயது அடிப்படையில் தனித்தனி நீதிமன்ற நடைமுறைகள் இருக்கும்.
முன்னதாக கல்வி அமைச்சர் பத்லினா சிடேக், அந்த வழக்கில் தொடர்புடைய நான்கு மாணவர்கள் வரும் நவம்பர் 3 ஆம் தேதி முதல் தொடங்கவிருக்கும் SPM தேர்வை எழுத அனுமதிக்கப்படுவார்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.
இது அவர்களின் கல்வி வாய்ப்பை பாதிக்காமல், சட்ட நடவடிக்கைகளை தொடரும் முயற்சி என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த நான்கு சந்தேக நபர்களும், தற்போது ஆறு நாள் தடுப்பு காவலில் மேல் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்