கோலாலம்பூர், மார்ச் 6 – நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்ட மிட்லண்டஸ் தமிழ்ப்பள்ளி தற்போது தனது நிரத்தர இடத்தில் பிரமாண்டமாக நிலையான கட்டிடத்தைக் கட்டி 600க்கும் மேற்பட்ட மாணவர்களை கொண்டு செயல்பட்டு வருகிறது.
முன்னதாகப் பள்ளிக்குப் புதிய கட்டிடம் கட்டுவதில் உதவிய சிலாங்கூர் மாநில அரசங்கம், தற்போது தங்கும் வசதியைக் கட்டுவதற்கும் 4 மில்லியன் ஒதுக்கிடு செய்து அக்கட்டிடத்தை கட்டி வழங்கியுள்ளது.
2019 ஆம் ஆண்டில் கட்டி நிறைவடைந்த இந்த தங்கும் விடுதியில், வசதி குறைந்த மாணவர்கள் குறிப்பாகப் பள்ளிக்குச் செல்வதற்கும் கல்வி கற்பதற்கும் சிரமங்களை எதிர்நோக்கும் குடும்ப பின்னணியில் உள்ள மாணவர்கள் விடுதியில் தங்குவதற்கு இப்போது விண்ணப்பம் செய்யலாம் என மிட்லண்டஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் வரியத் தலைவர் கா. உதயசூரியன் தெரிவித்தார்.
இந்த தங்கும் விடுதியில் இருக்கும் மாணவர்களுக்கு அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது. உணவு முதல் நூலகம், யோக வகுப்புகள், உடற்பயிற்சி வகுப்புகள், விளையாட்டு மைதானம் என அந்த தங்கும் விடுதியில் பல வசதிகள் அமைந்துள்ளது.
இந்த தங்கும் வசதி நான்காம் மற்றும் ஐந்தாம் வகுப்புகளில் பயிலவிருக்கும் ஆண் மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகின்றது. இருப்பினும், குடும்பச் சூழல்கள் அடிப்படையிலும் மற்ற ஆண்டு மாணவர்களுக்கும் இவ்வசதி வழங்கப்படுவதற்கு வாய்ப்பு உள்ளது எனவும் அவர் கூறினார்.
தற்போது 15 மாணவர்களுடன் செயல்படும் இந்த தங்கும் விடுதியில், இவ்வாண்டு 50 ஆண் மாணவர்கள் எதிர்ப்பார்க்கப்படுகின்றனர். ஆக, விண்ணப்பிக்க விரும்பும் பெற்றோர்கள் மிட்லண்டஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளியைத் தொடர்பு கொண்டு, விரைந்து பதிவு செய்துக்கொள்ளுங்கள்.